துணை ராணுவ வரலாற்றில் முதல்முறை.. வீரர்களுக்காக திருமண வெப்சைட்.. இந்தோ-திபெத் எல்லை போலீஸ் அசத்தல்
டெல்லி: துணை ராணுவ வரலாற்றில் முதல்முறையாக படை வீரர்களுக்காக திருமண வெப்சைட்டை இந்தோ-திபெத் எல்லை போலீஸ் துவங்கி உள்ளது.
ஐடிபிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தோ -திபெத் எல்லை போலீஸ் படையில் சுமார் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இந்தியா- சீனா இடையே எல்லையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படையில் பல ஆயிரம் ஆண்களும், பல ஆயிரம் பெண்களும் பணியாற்றுகிறார்கள். தொலைதூரங்களில் ஆபத்தான இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு திருமண வரன் தேடுவது கடினமாக உள்ளது.
துக்ளக் ரமேஷ் இல்ல திருமண விழா... ஓ.பி.எஸ் -குருமூர்த்தி சந்திப்பு தவிர்ப்பு
படைக்குள்ளே ஜோடி
இந்த படையில் பணியாற்றும் பல ஆண் பெண் வீரர்களுக்கு திருமண வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து கவலை அடைந்த இந்தோ -திபெத் போலீஸ்படை அதிகாரிகள், தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடியை தேடுவதற்கு திருமண வெப்சைட்டை உருவாக்கும்படி தொழில்நுட்ப பிரிவு படையிடம் கேட்டனர்.
வீரர்கள் பற்றி விவரம்
அதன்படி இந்த வெப்சைட் கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது. ஐடிபிடி வெப்சைட்டிலேயே இதற்கான லிங்க் உள்ளது. இதில் ஒரு வீரரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் எந்த விதமான முறைகேடுகளுக்கும் வழிவகுக்காமல் பொருத்தமான ஜோடியை தேட முடியும்.
அவர்களின் புகைப்படம்
வீரர்கள் வகிக்கும் பதவி, சொந்த ஊர், பணியில் சேர்ந்த ஆண்டு, எங்கு பணியாற்றுகிறார், அவரது புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வெப்சைட்டில் யாரும் தகவலை மாற்றிவிட முடியாது. தொலைப்பேசி எண் மற்றும்இமெயில் முகவரியை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் தங்களை பற்றி பதிவு செய்துள்ளனர். ஐடிபிபி படையில் பணியாற்றும் வீரர்கள் மட்டுமே இந்த வெப்சைட்டைக்குள் தகவல்களை பார்க்க முடியும். மற்ற யாரும் பார்க்க முடியாது.
நல்ல திட்டம்
இந்நிலையில் இந்த வெப்சைட் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரே படைக்குள் பணியாற்றுபவர்கள் தங்களுக்குள் பொருத்தமானவர்களை தேடிக்கொள்வதற்கான நல்ல திட்டம் இது. சிஆர்பிஎப், பிஎஸ்எப்,சிஐஎஸ்எப்,எஸ்எஸ்பி உள்பட மத்திய படைகளில் 10லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் திருமணம் ஆகாதவர்கள் 2.5லட்சம் பேர். இத்திட்டத்துக்கு வெற்றி கிடைத்தால் மற்ற படைகளிலும் துவங்கப்படும் என்றார்.