ஷீனாவைப் புதைக்க 3 நாட்கள் ஊர் பூராவும் சுற்றி 5 இடங்களைத் தேர்வு செய்த இந்திராணி
மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்து புதைக்க மும்பையைச் சுற்றியுள்ள இடங்களில் தனது கார் டிரைவருடன் மூன்று நாட்கள் சுற்றி இந்திராணி தேடுதல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்ற மகளையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர் தனது முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திடுக்கிடும் தகவல்கள்...
முறையற்ற காதலால் இந்திராணி தன் மகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீசாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திட்டமிட்ட கொலை...
நன்கு திட்டமிட்டு ஷீனாவை இந்திராணி கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பின்னர் ஷீனாவை எங்கு புதைப்பது என்பதைக் கூட தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டுள்ளார் அவர்.
ஆள்நடமாட்டமில்லாத பகுதி...
இதற்காக தன் டிரைவர் ஷியாம்வார் ராயுடன் மும்பையைச் சுற்றியுள்ள சில ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களை அவர் நோட்டமிட்டுள்ளார். லோனாவாலாவில் உள்ள மலைப்பகுதி, கர்னாலா சரணாலயம் அருகே உள்ள வனப்பகுதி, மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் இடைப்பட்ட பகுதி உட்பட பல இடங்களில் ஷீனாவைப் புதைக்க இடம் தேடியுள்ளார் இந்திராணி.
ராய்காட் வனப்பகுதி...
இறுதியாக ராய்காட் வனப்பகுதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ராய்காட் வனப்பகுதியிலும் ஷீனாவின் உடலைப் புதைக்க தகுந்த இடத்தை சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளார் இந்திராணி. ஆனால், எதன் அடிப்படையில் ராய்காட் வனப்பகுதியை அவர் தேர்வு செய்தார் என்ற விபரத்தை போலீஸ் விசாரணையில் கூற மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4வது நபர்...
vஇந்த கொலைக்கு இமெயில், இன்டர்நெட் போன்ற நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். மேலும், இந்த கொலையில் 4-வதாக ஒரு நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.