இந்திராணி மயங்கி விழுந்தார்.. என்ன புண்ணியம்.. போலீஸ் காவல் நீட்டிப்பு!
மும்பை: மும்பை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட இந்திராணி முகர்ஜி கோர்ட் அறையில் மயங்கி விழுந்தார். இருப்பினும் அவரது போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோர் இன்று மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தனது தாயாரைப் பார்க்க இந்திராணிக்கும், சஞ்சீவ் கன்னாவுக்கும் பிறந்த மகளான விதி வந்திருந்தார். கோர்ட் அறையில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் இந்திராணி. அதைப் பார்தது விதி கண்ணீர் விட்டு அழுதார். இதைப் பார்த்த நீதிபதி, தாயும், மகளும் சந்தித்துப் பேசிக் கொள்ள அனுமதி அளித்தார்.
அதன் பின்னர் செப்டம்பர் 5ம் தேதி அனைவரின் போலீஸ் காவலையும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்திராணி உள்ளிட்ட 3 குற்றம் சாட்டப்பட்டோரும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக அரசு வக்கீல் வாதிடுகையில், இந்தக் கொலை வழக்கில் மகாராஷ்டிராவைச் சேராத சிலரும் தொடர்பு கொண்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே மூன்று பேரையும் தொடர்ந்து போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.