"பீட்டர்" விட்டு வாழ்க்கை நடத்திய இந்திராணி.. முதல் கணவருடனும் தொடர்பில் இருந்தது அம்பலம்
மும்பை: இந்திராணி முகர்ஜி, தனது 2வது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் பல பொய்களைக கூறி வாழ்க்கை நடத்தி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல விஷயங்களை அவர் பீட்டர் முகர்ஜியிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். பீட்டரை கிட்டத்தட்ட இருட்டறையில் வைத்தது போல வைத்திருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
பீட்டர் முகர்ஜியே, தனது மனைவியின் போக்கு குறித்து தற்போது தெரிய வந்து உடைந்து போயுள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடந்தது என்பதே அவருக்குப் புரியவில்லை. அந்த அளவுக்கு முட்டாள்தனமான நிலையில் பீட்டரை வைத்திருந்திருக்கிறார் இந்திராணி.
தனது முதல் கணவருக்குப் பிறந்த பிள்ளைகளையே தனது பிள்ளைகள் இல்லை என்று கூறியிருந்த இந்திராணியின் துணிச்சலான இந்த செயல் பீட்டரை நிலை குலைய வைத்து விட்டது.
எச்.ஆர். ஆலோசகர்
ஸ்டார் இந்தியாவின் தலைமை செயலதிகாரியாக பீட்டர் இருந்தபோது அவரிடம் எச்.ஆர். ஆலோசகராக வந்து பணியில் சேர்ந்தார் இந்திராணி. இருவருக்குள்ளும் அப்போது நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு அது காதலானது.
திருமணத்திற்குப் பின்னர் தனி நிறுவனம்
இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வயது வித்தியாசத்தை இருவரும் பொருட்படுத்தவில்லை. திருமணத்திற்குப் பின்னர் ஸ்டார் இந்தியாவிலிருந்து வெளி வந்த பின்னர் மனைவியுடன் சேர்ந்து 9எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் பீட்டர் முகர்ஜி.
எத்தனை எத்தனை பொய்கள்
பீட்டரை திருமணம் செய்து கொண்ட பிறகு பல பொய்களை திட்டமிட்டு பீட்டரிடம் கூற ஆரம்பித்துள்ளார் இந்திராணி. அதில் மெகா பொய் தனது பிள்ளைகளை, தம்பி, தங்கை என்று கூறி பீட்டரை நம்ப வைத்தது.
குவஹாத்தியில் தங்க வைத்து
மேலும் மேற்கு வங்கத்தில் இருந்த தனது மகனையும், மகளையும் குவஹாத்திக்கு அனுப்பி அங்கு தனது பெற்றோருடன் தங்க வைத்தார். பெற்றோரிடமும், தனது பிள்ளைகளிடமும் பீட்டரிடம் எதையும் கூறக் கூடாது என்று கூறி வைத்திருந்தார்.
முதல் கணவருடன் தொடர்ந்த நட்பு
அதேசமயம், தனது முதல் கணவருடனும் தொடர்பில் இருந்து வந்தார். என்ன மாதிரியான நட்பை இருவரும் பராமரித்து வந்தனர் என்று தெரியவில்லைல். ஆனால் அடிக்கடி இந்திராணியைப் பார்க்க தான் தங்கியிருந்த திரிபுராவிலிருந்து குவஹாத்தி வந்து போவாராம் முதல் கணவர்.
பாவம் பீட்டர்
ஆனால் இது எதுவுமே பீட்டர் முகர்ஜிக்குத் தெரியாது, தெரிவிக்கப்படவில்லை. இந்திராணியின் மகளை அவருடைய தங்கை என்று நம்பி வந்துள்ளார். மகனை தம்பி என்று நினைத்துள்ளார்.
எல்லாமே குழப்பம்
மொத்தத்தில் பீட்டரைச் சுற்றி ஒரு மாய உலகத்தைப் படைத்து அதில் அவரை நடமாட வைத்து ஏமாற்றியுள்ளார் இந்திராணி. அதேசமயம், தனது மகளின் காதல் தவறானது, முறை தவறியது என்று தெரிந்ததும் அதை முதல் ஆளாக தட்டிக் கேட்டுள்ளார் இந்திராணி. அந்த விஷயத்தில் மட்டுமே அவர் சற்று நேர்மையாக நடந்துள்ளார். ஆனால் கொலை வரை அவர் போனதுதான் பரிதாபகரமானது.