ஒருவழியாக ஷீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட இந்திராணி
மும்பை: ஷீனா அமெரிக்காவில் உயிருடன் உள்ளார் என்று திரும்பத் திரம்ப கூறி வந்த இந்திராணி முகர்ஜி ஒரு வழியாக தனது மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளாராம்.
தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் ராயும், கன்னாவும் உண்மையை ஒப்புக் கொண்டனர். ஆனால் இந்திராணியோ தான் ஷீனாவை கொலை செய்யவே இல்லை என்று தெரிவித்து வந்தார். மேலும் ஷீனா அமெரிக்காவில் உயிருடன் இருப்பதாகவும், தன் மீதுள்ள வெறுப்பால் உண்மையை கூற முன்வராமல் இருப்பதாகவும் திரும்பத் திரும்ப கூறி வந்தார்.
இந்நிலையில் ஷீனாவை கொலை செய்ததை இந்திராணி தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். கன்னாவும், ராயும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அறிந்த பிறகே இந்திராணியும் ஷீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எதற்காக கொலை செய்தார் என்பதை தெரிவிக்க மறுத்து வருகிறார். மேலும் மகன் மிகைலை கொலை செய்ய முயற்சி செய்ததை ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்.
வரும் 5ம் தேதி வரை இந்திராணி போலீஸ் காவலில் இருப்பதால் அதற்குள் அவரிடம் இருந்து உண்மையை பெற போலீஸ் அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.