கொலை குற்றவாளி இந்திராணி முகர்ஜிக்கு டெங்கு: மருத்துவர்கள் சிகிச்சை
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரின் தாய் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாம். அவருக்கு ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மாதத்தின் துவக்கத்தில் இந்திராணியின் சிறுநீர் மாதிரியில் அளவுக்கு அதிகமாக கொகைன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெ.ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சிறைக்கு திரும்பினார்.
தனது தாயின் மரண செய்தியைக் கேட்டு தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாக இந்திராணி தெரிவித்தார். இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.