3 பெட்ரூம் ஃபிளாட் கேட்டதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பே ஷீனாவை கொல்ல முயன்ற இந்திராணி
மும்பை: இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை 6 ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மும்பையில் வைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்த வழக்கில் கைதான இந்திராணி நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் கிடைத்துள்ளது.
ஷீனா
இந்திராணி தனது மகள் ஷீனா போராவும், மகன் மிகைல் போராவும் தன்னுடைய தங்கை, தம்பி என கணவர் பீட்டரிடம் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை வெளியே கூறிவிடுவோம் என்று ஷீனாவும், மிகைலும் இந்திராணியை மிரட்டி பணம் பறித்துள்ளார்கள்.
இந்திராணி
ஷீனா இந்திராணியை மிரட்டி தனக்கு மும்பை பந்த்ரா பகுதியில் ஒரு ஃபிளாட் வாங்கிக் கொடுக்குமாறு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திராணி அப்போதே ஷீனாவை கொலை செய்ய முயன்றுள்ளார்.
பணம்
இந்திராணி ஷீனாவின் வங்கிக் கணக்கிற்கு பெரும்தொகையை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த தொகையை திருப்பிக் கேட்டபோது ஷீனா தர மறுத்துள்ளார்.
கொலை
இந்திராணி ஷீனாவை கொலை செய்தபோது வெறிபிடித்தவர் போன்று இருந்ததாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் முன்னாள் டிரைவர் ராய் தெரிவித்துள்ளார். இந்திராணி ஷீனாவின் கழுத்தை நெறிக்கையில் பந்த்ராவில் 3 பெட்ரூம் ஃபிளாட்டை எடுத்துக் கொள் என்று வெறித்தனமாக திரும்பத் திரும்ப கூறினார் என்று ராய் தெரிவித்துள்ளார்.
சிபிஐ
ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை எந்த குறுக்கீடும் இன்றியும், நியாயமாகவும் நடக்க சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.