திருமண உறவு முறிந்துவிட்டது.. 3வது கணவருக்கும் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினார் இந்திராணி முகர்ஜி
ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தனது மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்து வந்தார் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி முகர்ஜி(46).
இந்திராணி முகர்ஜி தான் பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மூன்றாவது கணவர் பீட்டர்
இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.
பெற்ற மகள் கொலை
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மும்பை சிறையில் அடைப்பு
இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விவாகரத்து நோட்டிஸ்
46 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஆர்த்தர் சாலை சிறையில் அடைபட்டுள்ள தனது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
உறவு முறிந்துவிட்டது
அதில் மீண்டும் சீரமைக்க முடியாத அளவுக்கு இந்த திருமண உறவு முறிவடைந்து விட்டதாகவும், இந்த உண்மை உங்களுக்கும் தெரியும் என்பதால் வரும் 30-ம் தேதிக்குள் எனது கட்சிக்காரரான இந்திராணிக்கு உரிய பண நிவாரணத்தை தந்து விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பீட்டர் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டிசில் குறிப்பிட்டுள்ளார்.