உயர்நீதிமன்ற நீதிபதியாகாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இந்து மல்ஹோத்ரா!
உயர்நீதிமன்ற நீதிபதியாகாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா.
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் காலி இடங்களுக்கான தேர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய கொலிஜியம் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இந்தக் குழு அனுப்பி வைத்தது. அதில், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.
இதில், உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.
61 வயதான மல்ஹோத்ரா, 2007-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இவர் வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்.
இவ்வார இறுதியில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை பரிந்துரைத்த முடிவை மீண்டும் பரிசீலிக்கும்படி தேர்வுக் குழுவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம், இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.