ஒடிஷாவில் 5 நாட்களில் 30 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பால் பதற்றம்
புவனேஸ்வர்: ஒடிஷா மாநில மருத்துவமனையில் 5 நாட்களில் 30 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள சிசு பவன் எனப்படுகிற சர்தார் வல்லபாய் படேல் போஸ்ட் கிராஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் பீடியாட்ரிக்ஸ். ஒடிஷாவில் சிறந்த மருத்துவமனையாக இது கருதப்படுகிறது.
இம்மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்து 30 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அதனு சபயாசாசி நாயக், இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அது 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
அந்த அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தடுத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.