லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை வைத்து ஆட்டம் காட்டும் பாக். தீவிரவாதிகள்
டெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவதால் அவர்களை சமாளிப்பது இந்திய ராணுவத்திற்கு சவாலாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி செக்டரில் பாகிஸ்தானின் ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளது. அங்கு உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானில் இருந்து யாரும் ஊடுருவிவிடாமல் இருக்க இரவும், பகலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் யாரும் ஊடுருவாமல் இருக்க அப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன கருவி
உரி செக்டர் பகுதி வழியாக யாராவது ஊடுருவுகிறார்களா என்பதை கண்காணிக்க இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இமேஜர் கருவியை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான்
உரி செக்டரில் இந்திய நிலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாகிஸ்தான் ராணுவ நிலை. அவர்கள் அங்கிருந்து இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
பனிக்காலம்
முன்பெல்லாம் பனிக்காலத்தில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது இருக்காது. ஆனால் தற்போது பனிக்காலத்திலும் ஊடுருவுகிறார்கள்.
தீவிரவாதிகள்
தற்போது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பாகிஸ்தானிய தீவரவாதிகள் இந்திய ராணுவத்துடன் 36 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் ராணுவ வீரர்களை போன்று திறமையாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
சாட்டிலைட் போன்கள்
அந்த 6 தீவிரவாதிகள் பனியின் தாக்கம் தெரியாமல் இருக்க சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகள் அணிந்திருந்தனர். அவர்களிடம் சாட்டிலைட் போன்கள், அதிக சக்தி அளிக்கும் உணவுகள், அதிநவீன ஆயுதங்கள் இருந்தன.
திறமை
கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி செக்டார் வழியாக ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள் 8 பேர் மற்றும் போலீசார் 3 பேரை கொன்றனர். அவர்கள் செயல்பாட்டில் ராணுவ பயிற்சி தெரிந்தது.
ஜிபிஎஸ்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முன்பு எல்லாம் ஸ்போர்ட்ஸ் ஜிபிஎஸ் வைத்திருந்தனர். ஆனால் தற்போதோ அதிநவீன ஜிபிஎஸ் கருவிகளுடன் வருகிறார்கள். மேலும் அவர்கள் ஸ்கைப் போன்றவை மூலம் பேசிக் கொள்கிறார்கள்.
இந்திய ராணுவம்
தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானில் இருந்து ஊடுருபவர்களை சமாளிக்க முடியும்.