ஏறுமுகத்தில் பாஜக... "ஆறு"முகமாக மாறிய காங்கிரஸ்...!
டெல்லி: உ.பி. உத்தரகண்ட் உள்ளிட்ட வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆக சுருங்கி விட்டது.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் உ.பியில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது. உத்தரகண்ட்டில் அது காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. கோவாவில் ஆட்சியமைக்கப் போகிறது. மணிப்பூரிலும் அது உரிமை கோரியுள்ளது. பஞ்சாபில் மட்டுமே அது கேவலமான தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
ஆறுமுகம் காங்கிரஸ்
மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின் கையிலிருந்து பல மாநிலங்கள் நழுவியுள்ளதால் அது தற்போது வெறும் 6 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி புரிந்து வருகிறது. கர்நாடகா, மிஸோரம், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப் ஆகியவையே அது.
7 மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் - இடதுசாரிகள்
பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று எடுத்தால் அது 7 மாநிலங்கள் உள்ளன. அங்கு பிராந்தியக் கட்சிகள் மற்றும் இடதுசாரி ஆட்சி நடந்து வருகிறது.
தென்னிந்தியா சூப்பர்
இதில் விசேஷம் என்னவென்றால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக இல்லை என்பதுதான். கர்நாடகத்தில் மட்டுமே அது சற்று நப்பாசையுடன் உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அது கனவில் கூட ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலைதான் இன்றளவும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்திற்குக் குறி
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்து விடுவது என்ற குறிக்கோளுடன் இப்போதே பல வேலைகளை பாஜக பார்க்க ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தை காய வைத்து
இதற்காகவே காவிரி விவகாரத்தில் பாஜக, கர்நாடகத்திற்கு முழு ஆதரவாக நடந்து கொண்டது. தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் வேலைக்கு ஆகாது என்பதால்தான் தமிழகத்தை அது கண்டு கொள்ளவில்லை. மாறாக கர்நாடகத்திற்கு முழு ஆதரவாக அது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.