எல்லைகளை போலவே தகவல்களும் முக்கியம்.. சைபர் தாக்குதலால் நாட்டையே அழிக்க முடியும்..ராணுவ தளபதி பேச்சு
நாக்ப்பூர்: தற்போதைய சூழ்நிலையில், தகவல்களைப் பாதுகாப்பதே தேசியப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாக ராணுவப் படைத் தளபதி நராவனே தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலத்தில் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்காமலேயே சைபர் தாக்குதல் மூலம் ஒரு நாட்டை அழிக்க முடியும். இதனால் தற்போது அனைத்து நாடுகளும் எல்லைகளைப் பாதுகாக்கச் செலவிடுவது போலவே சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் பெரும் தொகையை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராணுவ தளபதி நராவனே, தற்போதைய சூழ்நிலையில், தகவல்களைப் பாதுகாப்பதே தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சைபர் போர் என்பது நாம் எல்லையில் காணும் அச்சுறுதல்களைப் போல வழக்கமானது அல்ல. இது நமது தகவல் அமைப்புகளும் மட்டும் இருக்கும் அச்சுறுத்தல் இல்லை, ஒட்டுமொத்த நாட்டிற்கே இருக்கும் அச்சுறுத்தல். சைபர் தாக்குதல் மூலம் தகவல்களைத் திருடி அதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்ய முடியும்.
தேசிய பாதுகாப்பு என்பது ஆறு முக்கியமான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டது, அதாவது இராணுவ பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த அனைத்திலும் நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நமது தேசம் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் பாதுகாப்புப் பணிகளில் டிரோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த நராவனே, இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் இதைக் கையாளவும் இந்தியா தயாராகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.