வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் விதி மீறல்.. இன்போசிஸ் பவுண்டேஷன் உரிமம் அதிரடி ரத்து!
வெளிநாட்டு நிதி பெறுவதில் விதி மீறியதாக, இன்ஃபோசிஸ் அறக்கட்டளை அமைப்பின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக இன்ஃபோசிஸ் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் அங்கமாக இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் பல்வேறு சமுதாய நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது.
கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, கலை மற்றும் பண்பாட்டு ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் ஆதரவற்றோர் நலன் சாரந்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பதவி வகித்து வருகிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நிதி வருகிறது. இந்த நிலையில், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் போன்ற வெளிநாட்டு நிதி பெறும் அறக்கட்டளை அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதி குறித்த வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எவ்வளவு நிதி பெறப்பட்டது, அது எதற்காக செலவிடப்பட்டது என்பது குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளது.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் சார்பில் பதில் இல்லை. இதையடுத்து, இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி, எங்களது ஃபவுண்டேஷன் ஆண்டு வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் அவசியமில்லை. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிமத்தை திரும்ப அளிப்பதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்காத 1,755 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூறத்தக்கது.