இன்போசிஸ் ஊழியர்களின் சம்பள உயர்வை கணக்கிட வருகிறது 'ஐகவுன்ட்'! பழைய நடைமுறைக்கு குட்பை
பெங்களூர்: நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிர்ணயிக்க புதிய வழிமுறையை கையாள உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருடந்தோறும், சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆண்டு முழுமைக்குமான ஊழியர்களின் செயல்பாட்டை மதிப்பிட்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டுவருகிறது.
இந்த நடைமுறையை மாற்றி ஐகவுன்ட் என்ற பெயரிலான புதிய நடைமுறையை இவ்வாண்டு முதல் இன்போசிஸ் கையாள உள்ளதாக அந்த நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை பெல் கர்வ் என்ற நடைமுறையில் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறை இனி கைவிடப்படும். அமெரிக்க நிறுவமான ஐபிஎம் இதுபோன்ற புதிய நடைமுறைப்படிதான் சம்பள உயர்வு வழங்கிவருகிறது. பல மென்பொருள் நிறுவனங்கள் இந்த புதிய நடைமுறைக்கு மாறிவருகின்றன.
அவ்வப்போது, டார்கெட்டை எட்டிப்பிடிக்கும் திறனை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்குவது ஐகவுன்ட் நடைமுறையாகும். இதன் மூலம் திறமையான ஊழியர்களை கண்டுபிடித்து ஊக்குவிப்பது நிறுவனங்களுக்கு எளிதாகும் என்று தெரிகிறது.