ஆந்திராவில் பெண்களைத் தொடர்ந்து ஆண்களுக்கும் ஊசி... மர்ம நபரால் அதிகரிக்கும் பீதி- திணறும் போலீஸ்
ஹைதராபாத்: ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் வந்து ஊசி போடும் மர்மநபர், பெண்கள் மட்டுமின்றி தற்போது ஆண்களையும் தாக்கத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெண்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து மர்மநபர் ஒருவர் ஊசி போட்டு வருகிறார். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், வீடுகளில் கோலம் போடும் பெண்களை குறி வைத்து அந்நபர் தாக்குதல் நடத்தி வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் வரும் அந்நபர் கைக்குட்டை அல்லது ஹெல்மெட்டால் முகத்தை மறைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 13க்கும் மேற்பட்ட பெண்கள் அந்நபரால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மயக்க மருந்து...
பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் மர்மநபர் செலுத்தியது சாதாரண மயக்க மருந்து தான் என்றும், ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட ஆபத்தான நோய்க்கிருமிகள் அல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால், ஊசி போடும் நபர் மனநோயாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
உருவப்படம் வெளியீடு...
பாதிக்கப்பட்டோர் கூறிய அடையாளங்களின் படி, ஊசி போடும் மர்மநபரில் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நபரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சும் சூழல் அங்கு நிலவுகிறது.
ஆண்களும் பீதி...
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுவனுக்கும் மர்மநபர் ஊசி போட்டு விட்டு தப்பியுள்ளார். இதேபோல், நேற்று காலை பீமாவரம் மண்டலம், கொப்பாடு என்ற பகுதியில் பைக்கில் வந்த நபரிடம், மர்ம நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர், மர்ம நபர் திடீரென தான் கொண்டு வந்த ஊசியை முன்னால் உட்கார்ந்து பைக் ஓட்டி செல்லும் நபருக்கு செலுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
45 போலீஸ் குழுக்கள்...
ஊசி போடும் மர்ம மனிதரைப் பிடிக்க 230 பேர் கொண்ட 45 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்கள் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூடுதலாக 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மர்ம நபரை தேடும் பணி நடந்து வருகிறது.
பல்சர் பைக்...
மர்மநபர் ‘பல்சர்' பைக் மூலம் வந்து ஊசி போட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதால், கோதாவரி மாவட்டத்தில் பல்சர் பைக் வைத்திருப்போர் குறித்து முழு விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை...
மேலும், மருத்துவரின் பரிந்துரையின்றி, ஊசிகளையோ அல்லது எந்த வித மருந்துகளையோ விற்பனை செய்யக் கூடாது எனவும் மருந்து கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து உள்ளனர்.
மனநோயாளி...
மயக்க ஊசி போடும் நபர், பெண்களிடம் உள்ள நகைகளை திருடாததாலும், பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபடாத காரணத்தாலும், இவர் கண்டிப்பாக ஒரு மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டுமென மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்.பி பாஸ்கர் பூஷன் தெரிவித்துள்ளார்.