கெஜ்ரிவால் மீது இங்க் வீசிய இளம் பெண்.. பாஜகவின் சதி என ஆம் ஆத்மி கொந்தளிப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நேற்று இளம் பெண் ஒருவர் இங்க் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் ஆம் ஆத்மி சேனாவைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த செயலுக்குக் காரணம் பாஜகதான். அதுதான் தூண்டி விட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி அரசு டெல்லியில் "ஆட் -ஈவன்" கார் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது வெற்றியும் பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் கெஜ்ரிவாலை நோக்கி சில தாள்களைக் காட்டி ஆவேசமாகப் பேசினார். பின்னர் கையில் இருந்த மையை எடுத்து அவர் மீது வீசினார். அது அவரது முகத்தில் லேசாகப் பட்டது. இதையடுத்து பெண் காவலர்கள், அதிகாரிகள் அப்பெண்ணை மடக்கி் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்பெண்ணை் உடனடியாக மாடல் டவுன் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர். பஞ்சாப், ஆம் ஆத்மி சேனாவைச் சேர்ந்த பாவனா அரோரா என்று தெரிய வந்துள்ளது.
இந்த செயலுக்கு துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பாஜகவின் சதியாகும். போலீஸார் உரிய பாதுகாப்புத் தரத் தவறியுள்ளனர். அனைவரும் சேர்ந்து டெல்லி அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த செய்த முயற்சியே இது என்று கோபமாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கெஜ்ரிவால் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் அவமதித்துள்ளது டெல்லி காவல்துறை. யார் வேண்டுமானாலும் எங்களைத் தாக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். எங்களைக் கொல்லக் கூட முயற்சிக்கலாம். ஆம் ஆத்மிக்கு மக்களிடையே நிலவும் செல்வாக்கைவ பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் அவர்.