ஐரோப்பாவை அசத்தக் கிளம்பிய ஐஎன்எஸ் தரங்கிணி
டெல்லி: இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள டென்மார்க் சென்றுள்ளது.
கடற்படை கப்பல் ஐஎன்ஸ் தரங்கிணி ஐரோப்பாவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த மே மாதம் 4ம் தேதி இந்தியாவில் இருந்து கிளம்பியது. லோகாயன் 15 என்று அந்த பயணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தரங்கிணி டென்மார்க்கில் உள்ள ஆல்போர்கை அடைந்துள்ளது.
ஐரோப்பாவில் நடக்கும் போட்டிகளில் 300 பெரிய கப்பல்கள் கலந்து கொள்கின்றன.
இது குறித்து இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா கூறுகையில்,
தரங்கிணி 17 ஆயிரம் மைல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கப்பல் 14 நாடுகளில் உள்ள 17 துறைமுகங்களுக்கு செல்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படையின் பெயர் பல்வேறு நாடுகளில் பரவும். தரங்கினி தனது பயணத்தால் இந்தியாவுக்கு புகழ் தேடிக் கொடுத்துள்ளது என்றார்.
இந்த ஆண்டுக்கான கப்பல் போட்டிகள் இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அருகே உள்ள கடல்பகுதியில் நடக்கின்றது. 1956ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பெரிய கப்பல்களுக்கான போட்டிகள் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.