டெல்லி அருகே சைரன் பொருத்திய ஐ.ஜி. வாகனம் திருட்டு.. தீவிரவாதிகள் கைவரிசையா?
நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை ஐஜி ஒருவரின் வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் வசித்து வருபவர் ஆனந்த் ஸ்வரூப். இந்தோ-திபெத் எல்லைப்பதுகாப்புப் படை ஐஜி. சமீபத்தில் இவரது அதிகாரப்பூர்வ காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பதான்கோட் தாக்குதல் மற்றும் கடந்த 2001ல் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் போன்ற சம்பவங்களில் இதேபோல, காவல்துறை உயரதிகாரிகாளின் வாகனம் மூலமே தீவிரவாதிகள் ஊடுருவினர்.
எனவே, இந்திய - திபெத் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டு, ஊதா நிற சைரன் பொருத்தப்பட்ட கார் குறித்த தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்துள்ளார்.
குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் அதிகாரப்பூர்வ வாகனம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.