போலீஸ் ஸ்டேஷனுக்குள் பெண் கான்ஸ்டபிளை பலாத்காரம் செய்ய முயன்ற இன்ஸ்பெக்டர்!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், பெண் கான்ஸ்டபிளை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்திலுள்ளது, ககட்பூர். இந்த ஊர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) பணியில் இருந்தவர் ஸ்ரீகாந்த் பாரிக் (38). இவர் மீது கடந்த சனிக்கிழமை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் புகார் அளித்தார்.
அந்த புகாரில், "கடந்த 6ம்தேதி நள்ளிரவு நேரத்தில் பணியில் இருந்த என்னை, இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த், அவரது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது, என்னை மானபங்கம் செய்ய முற்பட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இந்த விவகாரத்தை வெளியில் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக சுபாஷ் சந்திர மொகந்தி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, தான் ஒரு நிரபராதி என்றும், தன்மீது கான்ஸ்டபிள் வீணாக பழிபோடுவதாகவும் இன்ஸ்பெக்டர் கூறினார். ஆனால், ஆதாரங்கள், இன்ஸ்பெக்டருக்கு எதிராக உள்ளன" என்றார்.
சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரும், பெண் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் அறைக்குள் போனதாக சாட்சியம் தெரிவித்துள்ளார். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பலாத்கார முயற்சி மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண் கான்ஸ்டபிளின் ஜாதியை அடிப்படையாக வைத்து, ஸ்ரீகாந்த் பாரிக்கிற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்துக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது உள்ளூர் நீதிமன்றம்.