இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொல்லப்பட்டது எப்படி?.. போலீஸ் இன்பார்மர் மூலம் கொள்ளையன் போட்ட சதி!
ராஜஸ்தான் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானுக்கு தமிழக போலீசாரை வரவழைத்து கொல்வதற்கு போலீஸ் இனபார்மரை மிரட்டி கொள்ளையன் நாதுராம் நடத்திய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
கொள்ளையன் நாதுராம் 3 பேருடன் மட்டுமே சுற்றி திரிகிறான் என்ற தகவலை பரப்பி தமிழக போலீசார் சிலரை மட்டுமே ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளான். இன்பார்மர் கூறியதை நமபி தமிழக போலீசார் 6 பேர் மட்டுமே ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
அதிக போலீசாரை அனுப்பியிருந்தால் தனது கணவர் இறந்திருக்க மாட்டார் என்று பெரியபாண்டியின் மனைவி கதறிய கதறல் இன்னமும் கண் முன்னே நிற்கிறது. ஆனால் சிலரை மட்டுமே ராஜஸ்தானுக்கு வரவழைக்க சாதுர்யமாக நாடகமாடியுள்ளான் கொள்ளையன் நாதுராம்.
ராஜஸ்தானில் கைது
லட்சுமிபுரம் ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் ராமாவாஸ் கிராமத்திற்கு சென்று சென்னாராம்,60, சங்கர்லால்,40, ஜனராம்,55, கீதாராம்,49 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கொள்ளையன் சதி
நாதுராமின் தந்தையும், அவருடைய உறவினர்களும் கைது செய்யப்பட்டனர்.
தன்னுடைய தந்தை மற்றும் உறவினர்களை விடுவிக்கக் கோரி நகைக்கடை உரிமையாளரை மிரட்டினான் கொள்ளையன் நாதுராம். அப்போதே போலீசார் மற்றும் நகைக்கடை உரிமையாளரை கொன்று விடுவேன் என நாதுராம் கூறியிருந்தான்.
போலீசுக்கு தவறான தகவல்
உறவினர்கள் விடுவிக்கப்படாததால் தனது உறவினர்கள் வீட்டை காட்டி கொடுத்த போலீஸ் இன்பார்மர் யார் என்று கண்டுபிடித்து, அவன் மூலம் தமிழக போலீசாரை தாக்க சதித்திட்டம் தீட்டினான். ராஜஸ்தானில் உள்ள ராம்புரா பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸ் இன்பார்மரை தமிழக போலீசாரிடம் கூற சொல்லி மிரட்டியுள்ளான் நாதுராம்.
காதலியுடன் நாதுராம்
போலீஸ் இன்பார்மர் மூலம் தவறான தகவலை தனிப்படையில் உள்ளவர்களுக்கு கொள்ளையன் நாதுராம் பரவ விட்டான். நாதுராம், அவனுடைய காதலி, நண்பர் மட்டுமே பாலி மாவட்டத்தில் சுற்றித்திரிவதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் ராஜஸ்தான் கிளம்பினர் தனிப்படை போலீசார்.
சுற்றி வளைத்த போலீஸ்
கொள்ளையன் நாதுராம் ஏராளமான கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்து தமிழக போலீசாரை தாக்க நேரம் பார்த்து காத்திருந்தான். நேற்று அதிகாலை 2 மணியளவில் ஜெய்தாரன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராம்பூர் கலன் கிராமத்தில் உள்ள செங்கல் சூளை அருகே நாத்துராம் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்தது.
துப்பாக்கியை பறித்த கொள்ளையன்
அங்கே நடந்தது வேறாக இருந்தது. நாதுராமின் உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் தனிப்படை போலீசாரை சுற்றிவளைத்து அவர்களை தாக்கினர். கற்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து விழுந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார் செய்வது அறியாமல் தவித்தனர். துப்பாக்கியை பறித்த கொள்ளையன், இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகரை சுட்டான். இதில் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனிசேகர், தலைமை காவலர் படுகாயமடைந்தனர்.
கொள்ளையன் நாதுராம்
ராஜஸ்தான் போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெரியபாண்டியின் மரணம் காவல்துறையினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம்தான் மதுரவாயல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இணைந்தார் பெரியபாண்டி. இப்போது ராஜஸ்தான் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.