ஹாலிவுட் படத்தை பார்த்துவிட்டு தந்தையிடம் ரூ.38 லட்சம் திருடிய 14 வயது சிறுமி
டெல்லி: டெல்லியில் 14 வயது சிறுமி ஒருவர் ஹாலிவுட் பட செய்தியை பார்த்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.38 லட்சத்தை திருடி தோழிகளுடன் வெளியூருக்கு சென்று ஷாப்பிங் செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பில்டர் ஒருவரின் மகள் 14 வயதான நித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு தினமும் பள்ளிக்கு சென்று வருவது போர் அடித்துள்ளது. இந்நிலையில் அவர் டிவியில் ஹாலிவுட் படமான ஓஷன் இலவனின் ரீமேக் பற்றிய செய்தியை பார்த்துள்ளார். உடனே அவருக்கு ஒரு ஐடியா வந்தது.
வீட்டை விட்டு வெளியேறி டேராடூன் வரை செல்ல முடிவு செய்தார். இதற்கு அவரது பள்ளித் தோழிகள் 3 பேரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நித்யா தனது தந்தையின் அறையில் உள்ள பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் பணத்தை திருடினார். வேறு யாரோ திருடிவிட்டதாக நினைத்து போலீசார் திருடர்களை தேடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நித்யா கடந்த வியாழக்கிழமை தோழிகளுடன் மாயமானார். அவர் பள்ளிக்கு அருகில் இருந்து டாக்சியில் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் டாக்சி டிரைவரின் செல்போன் எண்ணை பெற்று அவரை தொடர்பு கொண்டனர். 4 பள்ளி மாணவிகள் டேராடூன் செல்ல ரயில் நிலையத்திற்கு என் டாக்சியில் சென்றனர். ரயில் இல்லாததால் அவர்கள் டாக்சியிலேயே டேராடூனில் விடுமாறு கூறினர்.
இதையடுத்து அவர்களை டேராடூனில் உள்ள பெரிய ஹோட்டலில் இறக்கிவிட்டுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்று டாக்சி டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவரை அந்த ஹோட்டலுக்கு திரும்பிச் சென்று மேனேஜரிடம் அந்த மாணவிகள் திரும்பி வந்தால் அவர்களை அறையில் வைத்து பூட்டுமாறு தெரிவித்தனர்.
அவரும் அப்படியே செய்தார். மாணவிகள் ஷாப்பிங் சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினர். போலீசார் கூறியதுபடி மேனேஜர் அவர்களின் அறையை பூட்டினார். இதையடுத்து போலீசார் வந்து மாணவிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹோட்டல் அறைக்கு ரூ.10 ஆயிரம், டாக்சிக்கு ரூ.11 ஆயிரம், ஆடைகள், கைப்பைகள், காலணிகள், கூலிங் கிளாஸுக்கு ரூ.80 ஆயிரம் செலவு செயதுள்ளனர்.