யோகி ஆதித்யநாத்தை போல மாற ஆசை.. கர்நாடக சட்டசபை தேர்தலில் களமிறங்க சாமியார்கள் கடும் போட்டி
பெங்களூர்: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முன் மாதிரியாக கொண்டு கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலில் அதிகப்படியான சாமியார்கள் அரசியலில் களம் புக திட்டமிட்டுள்ளனர்.
பாஜக எம்.பியாக இருந்த சாமியார் யோகி ஆதித்யநாத், சர்ச்சை பேச்சுகளால் புகழ் பெற்றார். தீவிர வலதுசாரி இந்துத்துவ கொள்கை கொண்டவராக அறியப்பட்ட அவர், உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், முதல்வராக்கப்பட்டார்.
பிரதமர் மோடிக்கு பிறகு, பாஜக வட்டாரத்தில் பிரபல தலைவர்களில் ஒருவராக மாறிவிட்டார் ஆதித்யநாத்.
அரசியல் ஆசை
இவரை பார்த்து கர்நாடகாவிலுள்ள பல சாமியார்களுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாத வாக்கில்வரும் சட்டசபை தேர்தலில் அரசியலில் இறங்கி நாமும் ஆதித்யநாத் போல புகழ் பெற்றுவிடலாம் என நினைக்கிறார்களாம்.
ஒரு டஜன் சாமியார்கள் தயார்
ஒரு டஜன் சாமியார்கள், இப்போதே அரசியல் தலைவர்களிடம் இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்க நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்களாம். வழக்கமாக அரசியல்வாதிகள் மடாதிபதிகளை ரகசியமாக அணுகி, அந்த சமூகத்தினரின் வாக்குகளை தங்கள் வேட்பாளர்களுக்கு வழங்க கேட்பது கர்நாடகாவில் வழக்கம்.
நேரடி போட்டி
இம்முறை சாமியார்களே களத்தில் இறங்கி தங்கள் சமூக வாக்குகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் அரசியல் தலைவர்கள் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளனர். ஸ்ரீராஜசேகாரனந்தா சுவாமி, ஸ்ரீ பசவானந்தா சுவாமி உள்ளிட்டோர் இதில் பிரபலமானவர்கள்.
பாஜகவுக்கு கோரிக்கை
பெரும்பாலான சாமியார்கள் பாஜக தலைமையிடம் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கும் சாமியார்கள் சப்போர்ட் தேவை என்றபோதிலும், மதச்சார்பின்மை கட்சி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் அக்கட்சி சாமியார்களுக்கு டிக்கெட் வழங்க தயங்குவதாக தெரிகிறது.
பொதுசேவை
கர்நாடகாவிலுள்ள மடங்களும், அதன் அதிபர்களும், அந்தந்த பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் அமைத்து குறைந்த கட்டணத்தில் கல்வி சேவை அளித்து வருவது காலம் காலமாக நடக்கிறது. இந்த மடங்களால் நிறைய மக்கள் பயன்பெற்றுள்ளனர். எனவே மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று அந்த மடங்களை சேர்ந்த சாமியார்கள் கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருகிறார்களாம்.