முக்கிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட் வசதி... ரயில்வே துறைக்கான பட்ஜெட் திட்டம்!
நாடுமுழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் வசதியை அறிமுகம் செய்யும் விதமாக இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ரயில் பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை ஏற்படுத்தித் தரவும், நாடு முழுவதும் உஉள்ள முக்கிய நகர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் சுமார் 3 ஆயிரம் எஸ்கலேட்டர்கள் மற்றும் ஆயிரம் லிப்ட்டுகளை நிறுவ நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரூ. 3,400 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கண்டிவேலி, மடுங்கா, பாந்த்ரா, சர்ச் கேட் உள்ளிட்ட மும்பையின் சில ரயில் நிலையங்களில் சுமார் 372 எஸ்கலேட்டர்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு கூடுதலாக 2,589 எஸ்கலேட்டர்களை நாடு முழுவதும் நிறுவவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
எஸ்கலேட்டர்கள், மின்தூக்கிகளை நிறுவவதற்கு பொருளாதார ரீதியில் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு எஸ்கலேட்டர் நிறுவ ரூ. 1 கோடியும், ஒரு மின் தூக்கிக்கு ரூ. 40 லட்சம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் அண்மையில் தான் நகர மற்றும் புறநகர் ரயில் நிலையங்களின் தரத்தை எஸ்கலேட்டர் மற்றும் மின்தூக்கி பொருத்த ஏற்ற வசதி படைத்த இடமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 25 ஆயிரம் பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் முதல்கட்டமாக இந்த அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதே போன்ற அந்த ரயில் நிலையங்களின் வருவாயும் ரூ. 8 கோடி முதல் ரூ. 60 கோடி என்ற அளவில் இருந்தால் அந்த நிலையங்களுக்கு எல்கலேட்டர் மற்றும் லிஃப்ட் வசதி செய்ய பரிந்துரைக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து முக்கிய நகர மற்றும் கிராமப்புற ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அம்சத்தில் கவனம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏறத்தாழ எஸ்கலேட்டர், லிஃப்ட் பொருத்துவதற்கு ஒதுக்கப்படும் நிதி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் ரயில்வே துறையினர் கூறுகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் இணைத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.