இன்று முதல் 4 நாள் உடனடி வங்கி கடன்.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கொள்க!
Recommended Video
சென்னை: நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் மேளாவை, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் நடத்துகின்றன
சிறு குறு தொழில் செய்வோர், வீடு, பைக், கார் வாங்க விரும்புவோர், விவசாயிகளும் சில்லரை வர்த்தகர்கள், இந்த முகாமில் பங்கேற்று வங்கி கடனை உடனடியாக வாங்க முடியும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பண்டிகை காலங்களையொட்டி மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக வங்கி கடன் மேளா நடைபெறும் என்றும் மாவட்டங்களை அடையாளம் காண்பதற்காக பொதுத்துறை வங்கிகளின் ஆய்வு கூட்டம் நடைபெறும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
பொதுத்துறை வங்கிகள் ஆய்வு
இதன்படி பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த கூட்டத்தில் 400 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. மேலும் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே இந்த கடன் வழங்கும் முகாமில் தனியார் வங்கிகளும் இணைய விருப்பம் தெரிவித்தன.
கடன் வழங்கப்படுகிறது
இதன்படி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்து இருக்கின்றன.
உடனடியாக கடன் தருவாங்க
இன்னும் 3 தினங்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த கடன் மேளா நடக்கிறது.இதில் சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்புவோர், கல்வி கடன் வாங்கி விரும்புவோர். தனிநபர் கடன் வாங்க விரும்புவோர் ஆகியோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது.
விதிமுறைகள் பின்பற்றப்படும்
இந்த கடன் வழங்கும் திட்டம் பண்டிகை காலங்களில் வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் கைகளிலும் பணம் தாளாமாக புழங்குவதை உறுதி செய்யும் வகையில் கடன் வழங்கப்படுகிறது. உடனடி கடன் என்றாலும் அனைத்து நிதிதொடர்பான எச்சரிக்கை விதிகளும், விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படுகிறது.
கடன் வழங்கும் முகாம்கள்
அந்தந்த மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. உள்ளூர் வர்த்தக சங்கங்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தகசபைகள் மூலமும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் கடன் மேளா குறித்து தகவல் பரப்பப்பட்டுள்ளது.
தீபாவளி சமயத்தில் கடன்
இரண்டாவது கட்டமாக உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.