"காலிஸ்தான்"... சீக்கியர்களின் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்... உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில் உக்கிரமான ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆயுதப் போராட்டத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டு தனிநாடு கோரும் போராளிகள் தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து வேட்டையாடியது. இதில் தனிநாடு கோரும் இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கவே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையோர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகளிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர்.
இருந்தபோதும் பல்வேறு வகைகளில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் நாடு கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ந் தேதியன்று ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது இந்திய அரசுக்கு எதிராகவும் காலிஸ்தான் விடுதலைப் போரை ஒழித்துக் கட்டியதைக் கண்டித்தும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
லண்டனின் ஹைட் பார்க்கில் 3 ஆயிரம் சீக்கியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் இங்கிலாந்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இந்திய தூதரகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் சீக்கியர்களுடன் கரம் கோர்த்தனர்.
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சீக்கியர்களின் குருத்வாராக்களே நிதி உதவி செய்வதாகவும் இந்தியாவில் சீக்கியர்களின் தீவிரவாதத்தை மீண்டும் துளிர்விட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இந்த சீக்கிய தீவிரவாதத்தை தொடக்கத்திலேயே ஒடுக்குவதற்கான வியூகத்தையும் உளவுத்துறை வகுத்துவருகிறது.