அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை!
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பகுதி பதட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்.பி.க்களுடன் நாளை அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்கு செல்கிறார்.
மேலும், ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாஸின் 81- வது பிறந்தநாள் விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. கோபால்தாஸின் பிறந்தநாளை அயோத்தியில் விமரிசையாக கொண்டாட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பும் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் இந்த தருணத்தை பயன்படுத்தி, பேருந்து, ரயில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் உமர் மத்னி என்பவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என்ற உளவுத் துறை எச்சரிக்கையடுத்து, அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக உத்தரபிரதேசத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும், அம்பேத்கர் நகர், ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால், எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பும், சோதனை நடைமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.