சிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்? காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக துரத்தும் கேள்விகள்
Recommended Video
டெல்லி: காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படைவீரர்கள் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடைமுறையில் குளறுபடிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் நேற்று முன்தினம் நடைபெற்றது, சமீப காலத்தில் அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டில் ஒரே தாக்குதலில் காஷ்மீரில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது இதுதான் முதல் முறையாகும்.
ஸ்கார்பியோ காரில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆதில் அகமது தார் என்ற காஷ்மீரில் வசித்துவந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாதுகாப்பு படையினரின் பஸ் மீது மோத செய்து குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
ஹெலிகாப்டர்கள்
விடுமுறை முடிந்து திரும்பி வந்த வீரர்கள், ஜம்மு பகுதியில் இருந்து ஸ்ரீநகருக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 78 பஸ்களில், அடுத்தடுத்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தனர். மொத்தம் 25,00 சிஆர்பிஎஃப் வீரர்கள் அதில் பயணித்துள்ளனர். வழக்கமாக ஹெலிகாப்டர் மூலமாக அவர்கள் சேரவேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட தாக்குதல்
காலை 3.30 மணிக்கு ஜம்முவிலிருந்து இந்த பஸ்கள் கிளம்பியுள்ளன. கடந்த 2 நாட்களாக மோசமான வானிலை நிலவியதன், காரணமாக இந்த நெடுஞ்சாலை போக்குவரத்து பயன்பாடின்றி மூடப்பட்டிருந்தது. இதன் பிறகு நேற்று முன்தினம்தான் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் சரியாக சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு தீவிரவாதிகள் தரப்பில் திட்டமிடல் இருந்தது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
வெடி மருந்து கிடைத்தது எப்படி
மேலும், சுமார் 70 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரப்பிய காரை தீவிரவாதி கொண்டு சென்ற போது, அதை பாதுகாப்பு படையினர் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. வாகன சோதனைகளிலும் கவனம் செலுத்தவில்லை. மேலும் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள், பாகிஸ்தான் எல்லையில் இருந்து தான் காஷ்மீருக்குள் வந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. படிப்படியாக சிறிது சிறிதாக வெடிமருந்துகள் கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உளவுத்துறை இதை முன்கூட்டியே கண்டறிய தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்பதை, காஷ்மீர் ஆளுநர் சத்யபால், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தீவிரவாதி நோக்கம்
அதேநேரம், ஒரே ஒரு விஷயம் சற்று ஆறுதல் அளிக்கிறது. 78 பஸ்களும் மிகவும் நெருக்கமான தொலைவில் பயணிக்காமல், சற்று இடைவெளி விட்டு பயணித்துள்ளன. அதன் காரணமாக இந்த தாக்குதலில் சேதம் இன்னும் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிரவாதி ஆதில் அகமது, தான் ஓட்டிச் சென்ற காரை, சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பஸ்சை இடது பக்கமாகச் சென்று முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எந்த பஸ்ஸில் அதிகம் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு, அதிக வீரர்கள் சென்ற பஸ் மீது தனது காரை மோதச் செய்துள்ளார். இதன் மூலம் சேதத்தை முடிந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பது அந்த தீவிரவாதியின் நோக்கமாக இருந்துள்ளது.