சோட்டா ராஜன் "டூப்"போடு டெல்லி வந்திறங்கிய சிபிஐ!
டெல்லி: சோட்டா ராஜன் உயிருக்கு தாவூத் இப்ராகிம் கும்பலால் ஆபத்து இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக, அவரைப் போன்ற உருவத்துடன் கூடிய நபரையும் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வந்துள்ளது சிபிஐ குழு.
அக்டோபர் 25ம் தேதி பாலி தீவில் வைத்து இந்தோனேசியா போலீஸாரால் கைது செய்யப்பட்டார் சோட்டா ராஜன். அவரை இன்று சிபிஐ குழுவினர் பாலியிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.
அதிகா்லையில் அவரை டெல்லிக்கு கொண்டு வந்த சிபிஐ குழுவினர் அவரது உயிரைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அதில் ஒன்றுதான் சோட்டா ராஜன் போன்ற ஒருவரை கூடவே அழைத்து வந்து அனைவரையும் ஏமாற்றி சோட்டா ராஜனை பத்திரமாக அழைத்துச் சென்றது.
சோட்டா ராஜனைப் போலவே இரண்டு பேரை நியமித்து அவர்களை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்க வைத்து அனைவரையும் குழப்பியுள்ளனர் சிபிஐ குழுவினர். இவர்களுக்கும், சோட்டா ராஜனுக்குத் தரப்படுவதைப் போலவே கமாண்டோப் படைப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதன் மூலம் சோட்டா ராஜனைக் குறி வைக்கும் கும்பல்களுக்குக் குழப்பம் ஏற்படலாம் என்பதே சிபிஐயின் கணிப்பாகும்.
தாவூத் கும்பலால் மட்டுமல்லாமல், சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த சிலராலும் கூட அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சிபிஐ கருதுகிறது. எனவே அவரது உயிருக்கு பலமுனைகளிலிருந்தும் ஆபத்து இருப்பதாக சிபிஐ கணித்துள்ளது.
மும்பை போலீஸாரிலும் கூட பலர் சோட்டா ராஜன் கைதால் அதிருப்தியடைந்து அவரைப் போட்டுத் தள்ள முயலலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளும் கூட சோட்டா ராஜன் தங்களைப் போட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் கொல்ல முயற்சிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.