பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க ஆர்வமா.? முன்பதிவு துவங்கியது
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் , ரிசாட்-2பி என்கிற செயற்கை கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டை நேரில் பார்க்க விரும்புவோருக்கு இஸ்ரோ வாய்ப்பு அளித்துள்ளது.
22ம் தேதி விண்ணில் பாய உள்ள ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைகோள் புவியிலிருந்து சுமார் 555 கி.மீ. தொலைவில் குறிப்பிட்ட விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைகோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிநவீன புகைப்பட சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் ரேடார் தொழில் நுட்ப உதவியுடன் பூமியை மிகத்தெளிவாக படம் பிடித்து நம் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைகோள் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்போது கூட பூமியின் பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு இஸ்ரோ ஊக்குவித்து வருகிறது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ல் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட்டை நேரில் பார்வையிட முதல் முதலாக இஸ்ரோ 1000 பேருக்கு அனுமதி வழங்கியது. இதற்கென பிரத்யேகமாக இஸ்ரோ வளாகத்தில் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விண்வெளி கண்காட்சியகம், திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இரண்டாவது முறையாக ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இஸ்ரோ.
இதற்காக 1000 பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலை நேரில் பார்ப்பதற்கான முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து வரும் 22-ம் தேதி காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவப்பட உள்ளது.