கடும் அமளிக்கு இடையே ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல்! வருமானவரி விகிதங்களில் மாற்றம் இல்லை!!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருமானவரி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
லோக்சபாவில் இன்று முற்பகல் 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். அப்போது சீமாந்திரா எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ப.சிதம்பரம் பட்ஜெட்டை படிப்பதை சிறிது நேரம் நிறுத்தினார். தமது இருக்கையை முற்றுகையிட்ட எம்.பிக்களை சபாநாயகர் மீரா கெஞ்சி கேட்டுக் கொண்டதால் இருக்கைக்கு சீமாந்திரா எம்.பிக்கள் திரும்பினர். இருப்பினும் அவர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இந்த அமளிக்கு நடுவே பட்ஜெட்டை சிதம்பரம் தொடர்ந்து படித்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
இடைக்கால பட்ஜெட்டின் இதர முக்கிய அம்சங்கள்:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2%. ஆனால் அதற்கு முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் சராசரி வளர்ச்சி 5.9% மட்டுமே.
சென்னை- பெங்களூர் இடையே தொழில் மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதேபோல் பெங்களூர்- மும்பை, கொல்கத்தா- அமிர்தசரஸ் இடையேயும் தொழில் மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து மாணவர்கள் பெறும் கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
வாகனத் துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரியும் 12%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படுகிறது.
மேலும் வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் அமலுக்கு வரும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 புதிய அணு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட அதிவேக அணு உலை நிறுவப்பட இருக்கிறது.
நடப்பாண்டில் 296 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இலக்கை விஞ்சி ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம் உணவு, எரிபொருள், உர மானியத்துக்கு ரூ2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.