'எபோலா' நோயாளிகளை கண்டுபிடிக்க இந்திய ஏர்போர்ட்களில் 24 தெர்மல் ஸ்கேனர்கள்
டெல்லி: எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கூடுதலாக 24 தெர்மல் ஸ்கேனர் கருவிகளை பொருத்த மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவுக்கு சென்ற இடத்தில் எபோலா காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்த 26 வயது இந்திய வாலிபர் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை பரிசோதனை செய்ததில் அவரது விந்தணுவில் எபோலா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எபோலா வைரஸை கண்டுபிடிக்க நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கூடுதலாக 24 தெர்மல் ஸ்கேனர் கருவிகளை பொருத்த மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அருண் குமார் பாண்டா கூறுகையில்,
தற்போது சர்வதேச விமான நிலையங்களில் 18 தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து அதுவும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க சர்வதேச விமான நிலையங்களில் கூடுதலாக 24 தெர்மல் ஸ்கேனர்கள் வைக்கப்பட உள்ளன. நவம்பர் 20ம் தேதி வரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தெர்மல் ஸ்கேனரால் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூடுதலாக நான்கு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.