மீண்டும் எஸ்எம்எஸ் வசதி, 5 மாதங்களுக்குப் பின் காஷ்மீர் அரசு மருத்துவமனைகளில் இண்டர்நெட்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் இணைய சேவைகள் ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று அதிகாலை 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதேபோல் காஷ்மீரில் உள்ள அனைத்து மொபைல் போன்களின் எஸ்எம்எஸ் வசதி டிசம்பர் 31 நள்ளிரவு முதல் மீண்டும் வேலை செய்ய தொடங்கி உள்ளது. இந்த தகவலை ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்சால், "டிசம்பர் 31 நள்ளிரவு முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இணைய இணைப்பை மீண்டும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். அதன்படி இணையசேவை மீண்டும் வந்தள்ளது.
370 வது பிரிவை ரத்து செய்வதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்த அன்று முதல் ஜம்மு காஷ்மீரில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டன.
100 நாட்களுக்கு பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிய மொபைல் மற்றும இணைய சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. கடந்த வாரம், லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் 145 நாட்களுக்கு திரும்ப வந்தது.
தமிழக ரயில்களில் இனி புதிய கட்டணம் எவ்வளவு.. சென்னையில் இருந்து பிற ஊர் கட்டண விவரம்!
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் இணைய சேவைகள் ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ளது. அனைத்து மொபைல் போன்களின் எஸ்எம்எஸ் சேவைகளும் மீண்டும் வந்துள்ளன. ஜம்மு காஷ்மீரின் மாவட்டங்கள், முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் இணைய சேவைக்காக 900 டச் பாயிண்டுகள் மற்றும் சிறப்பு கவுண்டர்கள் செயல்படுகின்றன, சுமார் 6 லட்சம் பேர் இந்த டச் பாயிண்ட்களைப் பயன்படுத்தி வருவதாக ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பிரிப்பெய்டு இணைய சேவைகள் இன்னும்முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.