சுனந்தா மர்ம சாவு வழக்கு விசாரணை ஏன் பெரும் சவாலாக இருக்கப் போகிறது?
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடலில் பொலோனியம் 210, தாலியம், பாம்பு விஷம் உள்ளிட்டவை இருந்துள்ளது. இவை தான் அவர் இறக்க காரணமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் தடயவியல் குழுவுக்கு தலைமை வகித்த பத்ம பூஷன் விருது பெற்ற பேராசிரியர் பி. சந்திரசேகரன் ஒன் இந்தியாவிடம் கூருகையில்,
இறந்தவரின் உடல் இல்லாமல் விசாரணை நடத்துவது மிகவும் கடினம். நடந்தது பற்றி பிரேதத்தில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அது மிகவும் முக்கியம். அவர் மேலும் கூறுகையில்,
பொலோனியம் 210
பொலோனியம் 210 என்பது கதிர்வீச்சு தன்மை கொண்டது. சுனந்தா உடலில் பொலோனியம் இருந்தது குறித்த ஆய்வு வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டும். ட்ராம்பேவில் உள்ள ஆய்வகத்தில் இது குறித்த பரிசோதனை நடத்தலாம். உடலில் பொலோனியம் இருந்தாலும் அதை நிபுணர்கள் பார்க்காமல் இருக்கக்கூடும். ஏனென்றால் குடல், உள் உறுப்புகளில் தேடப்படும் பொதுவான விஷம் பொலோனியம் அல்ல.
பிரேதம்
கொலையா தற்கொலையா என்பது பிரேதத்தில் இருந்து தான் தெரியும். இது போன்ற வழக்கு விசாரணையில் பிரேதம் தான் முக்கியமானது. ராஜீவ் காந்தி வழக்கில் கூட தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவரின் உடலை தான் நம்பியிருந்தோம். இறந்தவரின் உடல் இல்லாமல் பொலோனியம் 210 இருப்பதை கண்டுபிடிப்பது கடினம். உடல் இல்லை எனில் விசாரணையாளர்கள் பொலோனியம் எங்கிருந்து வந்தது, சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை தான் நம்ப வேண்டும்.
எதற்கு அடக்கம்?
பொலோனியம் இருப்பதை கண்டுபிடிக்க பிரேதம் தேவை. அதனால் புதைத்த உடலை தோண்டி எடுக்க வேண்டும். உடலை எரித்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. மர்மமான முறையில் யாராவது இறந்தால் உடலை பாதுகாத்து வைப்பது தான் வழக்கம். இது போன்ற வழக்குகளில் உடலை விசாரணையாளர்கள் பாதுகாக்க வேண்டும் அல்லது இறந்தவரின் உறவினர்களிடம் கூறி உடலை எரிக்காமல் புதைக்குமாறு கூற வேண்டும்.
உடலின் வெளித்தோற்றம், நகங்கள், கண்கள், தோலை வைத்து நிறைய கூற முடியும். தற்போது உடல் இல்லாததால் குடலை ஆய்வகத்தில் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். குடலை பரிசோதித்து அந்த அறிக்கையை சாட்சியமாக நீதிமன்றத்தில் அளித்தால் விசாரணையாளர்களின் வேலை கடினமாகிவிடும். பரிசோதிக்கப்பட்ட குடல் இறந்தவருடையது தானா என்பதை அவர்கள் முதலில் நிரூபிக்க வேண்டும்.
காயம் எண் 10
சுனந்தாவின் உடலில் ஊசி போட்டதன் தடம் உள்ளது. அவரது உடலில் ஊசி மூலம் எதையோ செலுத்தியுள்ளார்கள் என்பதையே இந்த காயம் கூறுகிறது. அவரது விரலில் ஊசி போட்டுள்ளனர். வழக்கமாக கையில் தான் ஊசி போடுவார்கள். சந்தேகத்தை தவிர்க்க அவரது விரலில் ஊசி போட்டுள்ளார்கள்.
டாக்டர்கள்
பொலோனியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு எப்படி வந்தனர் என்பதை டாக்டர்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் பொலோனியம் இருப்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. உடலில் உள்ள கதிர்வீச்சை அளவிட தனி கருவி தேவை. கதிர்வீச்சானது காமா துகள்களாக இருந்தால், அதை வெளியில் வைத்து அளவிடலாம். அதேசமயம், அது ஆல்பா துகள்களாக இருந்தால், அது உடலுக்குள்ளேயேதான் இருக்கும். அதை அளவிடுவது கடினமாகும். அதுபோன்ற சமயத்தில் உடல் உள் உறுப்புகளின் மாதிரியை எடுத்து அளவிட வேண்டும். அது இன்னும் கடினமானதாகும், சுலபமானதல்ல. எனவே இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்பதே உண்மை.