பர்தா பற்றி கருத்து தெரிவித்த புகைப்படக் கலைஞரின் ஸ்டுடியோ தீ வைத்து எரிப்பு
திருவனந்தபுரம்: வாட்ஸ்ஆப்பில் பெண்கள் பர்தா அணிவது பற்றி கருத்து தெரிவித்த ரபீக் என்ற புகைப்படக் கலைஞரின் ஸ்டுடியோ தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி. ரபீக். புகைப்படக் கலைஞர். அவர் அப்பகுதியில் ஓப்குரா என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இஸ்லாம் என்றால் என்ன? என்ற வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் அந்த வாட்ஸ்ஆப் குழுவில், இஸ்லாமிய பெண்கள் தவறான செயல்களில் ஈடுபடுவது வெளியே தெரியாமல் இருக்க பர்தா அணிவதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த தகவல் பல வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு பரவியது. ஏன் சவுதி அரேபியா வரை அந்த தகவல் சென்றுள்ளது.
ரபீக்கின் கருத்தால் ஆத்திரமடைந்தவர்களில் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு கும்பல் ரபீக்கின் ஸ்டுடியோவை கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தீ வைத்து எரித்தது.
இது குறித்து ரபீக் கூறுகையில்,
நான் யார் மனதையும் புண்படுத்த அவ்வாறு கூறவில்லை. பர்தாவை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை தான் தெரிவித்துள்ளேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரபீக்கின் ஸ்டுடியோவை சில வாலிபர்கள் தான் எரித்திருக்க வேண்டும். இதில் எந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த கும்பல் தனது ஸ்டுடியோவுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நாசம் செய்துவிட்ட பிறகு தீ வைத்ததாக ரபீக் தெரிவித்துள்ளார். ஸ்டுடியோவுக்கு தீ வைக்கப்பட்டதால் தனக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.