2013ஆம் ஆண்டில் சரித்திரம் படைத்த சட்டசபை தேர்தல்கள்
டெல்லி: நடப்பாண்டில் நடைபெற்ற 9 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தேர்தல் நடைபெற்ற 9 மாநிலங்களில் கர்நாடகமும் டெல்லியும் சரித்திரம் படைத்திருக்கின்றன. தென்னிந்தியாவில் முதலாவது பாஜக ஆட்சி என்ற பெருமையை கொண்டிருந்த கர்நாடகாவில், நடப்பாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது அக்கட்சி
டெல்லியோ முக்கியமான விசித்திரத்தை சந்திக்க நேர்ந்தது. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக கட்சி தொடங்கி ஓராண்டே ஆன அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்து வந்தது. அத்துடன் வேறுவழியின்றி அந்த கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டிய நிலை காங்கிரஸுக்கும் வந்தது.
திரிபுரா
வடக்கிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் வழக்கம் போல மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் கட்சிகள் அணியே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று 50 தொகுதிகளைக் கைப்பற்றின. இம்மாநிலத்தில்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 93.57% வாக்குகளும் பதிவாகி இருந்தன.
மேகாலயா
மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 23-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் 71. 24% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தம் 60 தொகுதிகளில் காங்கிரஸ் 29 தொகுதிகளைக் கைப்பற்றிய கூட்டணி அரசை அமைத்தது.
நாகாலாந்து
மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகலாந்திலும் பிப்ரவரிமாதம் தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் 59 தொகுதிகளில் வழக்கம் போல நாகா மக்கள் முன்னணி என்ற மாநில கட்சியே அதிரடியாக வென்றது. மொத்தம் 37 தொகுதிகளை அது கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது.
கர்நாடகா
கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருந்த பாஜக மூன்று துண்டுகளாக சிதைந்து தேர்தலை சந்தித்தது. பாஜகவில் இருந்து முன்னாள் முதல்வர் எதியூரப்பா விலகி கர்நாடகா ஜனதா கட்சி என்ற பெயரில் களம் இறங்கினார். இதேபோல் பாஜகவின் ஸ்ரீராமுலுவும் தனியே கட்சி உருவாக்கி போட்டியிட்டார். இப்படி பாரதிய ஜனதா பல துருவங்களாக நின்று போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சி அசுர பலத்தோடு வென்று ஆட்சியை பிடித்தது.
மொத்தம் உள்ள 223 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 122 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் ஆளும் பாஜகவோ வெறும் 40 இடங்களையே கைப்பற்ற முடிந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதியூரப்பாவுக்கு 6 இடங்கள்தான் கிடைத்தது.
செமிபைனல்
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் நடைபெற்றதுதான் டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல். இதனாலேயே இது செமி பைனல் தேர்தல் என்றும் அழைக்கப்பட்டது.
பாஜகவுக்கு வெற்றி
இந்த தேர்தலில் பாஜக ஆண்ட மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் அக்கட்சி ஆட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டது. அம்மாநிலங்களின் முதல்வராக சிவ்ராஜ்சிங் சவுகானும் ராமன்சிங்கும் மீண்டும் பதவியேற்றனர்.
பறிகொடுத்த காங்கிரஸ்
ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவிடம் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் ,டெல்லியில் திசைதெரியாத காட்டில் தவிக்க விடப்பட்டது.
விசித்திர டெல்லி
டெல்லியில் பாஜக 32 இடங்களில் வென்றது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான கூடுதல் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைக்க அது விரும்பவில்லை. ஆண்ட காங்கிரஸ் கட்சியோ 8 இடங்களைத்தான் கைப்பற்றி 3வது இடத்துக்குப் போனது. இதனால் 28 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தாக வேண்டிய நிலைக்கு வந்தது காங்கிரஸ்.
கெஜ்ரிவால் முதல்வர்...
டெல்லியில் கட்சி தொடங்கி ஓராண்டுக்குள்ளேயே யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைக் கைப்பற்றியி முதல்வராகவும் பொறுப்பேற்கிறார் கெஜ்ரிவால் என்பது ஜனநாயகத்தின் சரித்திர பக்கத்தில் இடம்பெறத்தான் போகிறது.