மோடி பதவியேற்பு விழாவின் சுவாரஸ்யமான தகவல்கள்
டெல்லி: மோடியின் பதவியேற்பு விழாவின் சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழா குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
ஸ்மிருதி இரானி
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலை எதிர்த்து டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஸ்மிருதி இரானி. தற்போது அவர் 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சிபல் வசம் இருந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
சாய்வாலா
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அதே பல்கலைக்கழக வளாகத்தில் தாபா வைத்து நடத்தி வரும் ஷாசாத் இப்ராஹிமிக்கு மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சாய்வாலா மற்றொரு சாய்வாலாவை நினைவு கூர்ந்துள்ளார் என்று இப்ராஹிமி தெரிவித்தார்.
கஜபதி ராஜு
கேபினட் அமைச்சராக பதவியேற்கையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அசோக் கஜபதி ராஜு தனது பெயரை கூற மறந்துவிட்டார். இதையடுத்து பிரணாப் முகர்ஜி அவரை தடுத்து நிறுத்தி பெயரை கூறுமாறு தெரிவித்தார்.
ஆசி
அமைச்சர்களாக பதவி ஏற்ற ரவி சங்கர் பிரசாத், அனந்த் குமார், கோபிநாத் முண்டே, நிதின் கட்காரி ஆகியோர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காலை தொட்டு ஆசி பெற்றனர்.
பாலிவுட்
பதவியேற்பு விழாவில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், விவேக் ஓபராய், தர்மேந்திரா, அனுபம் கேர், நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நாத்திகவாதி
அமைச்சர்கள் அனைவரும் கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மோடி அமைச்சரவையில் நாத்திகவாதி யாரும் இல்லை என்பது தெரிகிறது.
மயக்கம்
விழாவுக்கு வந்தவர்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அமைச்சர் அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முலாயம்
மோடி அலையே இல்லை என்று கூறி வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவின் நலன் கருதி பதவியேற்பு விழாவுக்கு வந்தார்.
ஆங்கிலம்
வெங்கையா நாயுடுவுக்கு முன்பு பதவியேற்ற அனைவரும் இந்தியில் பதவியேற்றுக் கொண்டனர். வெங்கையா நாயுடு, சதானந்த கவுடா, நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, அசோக் கஜபதி ராஜு, பொன். ராதாகிருஷ்ணன், ஹர்சிம்ரத் கவுர், சர்பானந்த் சோனோவல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவியேற்றனர்.
சீக்கிரம்
வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பதவியேற்பு நிகழ்ச்சியை வேகமாக நடத்துமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணம் எடுத்துவிட்டு கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கையிலேயே அடுத்தவர் பதவியேற்க மேடைக்கு வந்துவிட்டார்.
உமா பாரதி
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அவரிடன் ஜூனியராக இருந்த உமா பாரதி சீனியரிடம் வேலை பார்க்க பிடிக்காமல் சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வர மறுத்தார். இம்முறை ஜோஷிக்கு அமைச்சர் பதவி இல்லை. ஆனால் உமா பாரதிக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதால் அவர் பதவியேற்பு விழாவில் சிரித்த முகமாய் இருந்தார்.
அதானி, அம்பானி
பதவியேற்பு விழாவில் குஜராத்தின் பெரிய தொழில் அதிபர்களான அதானி சகோதரர்கள் கலந்து கொண்டனர். தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
பிர்லா
ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா விழா நடந்த இடத்தற்கு வந்தபோது அவருக்கு இருக்கை இல்லை. இதை பார்த்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் தனக்கு அருகில் இருக்கும் இடத்தில் வந்து அமருமாறு அழைத்தார். பரவாயில்லை என்று பிர்லா கூறிய சில நிமிடத்தில் முகேஷுடன் வந்த பாலசுப்ரமணியம் என்பவர் பிர்லாவுக்கு ஒரு நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தார்.
ட்விட்டர்
கேபினட் அமைச்சராக பதவியேற்கும் முன்பு சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை @SushmaSwarajBjpல் இருந்து @SushmaSwaraj என்று மாற்றினார்.