ரூ.11.85 லட்சம் கோடி பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட்: ரிசர்வ் வங்கி
மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை: மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது
கடந்த நவம்பர் 8ம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மாதத்திற்கு இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பரிசீலனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக மாற்றம் இல்லாமல் அப்படியே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதேவேளையில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு உத்தேசமானது 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை அடுத்து இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன' என்ற தகவலைக் கூறினார்.