20 தமிழர்கள் படுகொலை: விசாரணை கோரும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
டெல்லி: ஆந்திரப் பிரதேச போலீசார் நடத்திய சந்தேகத்திற்கிடமான, சட்ட விரோதமான கொலைகள் தொடர்பாய் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற இருபது பேரை ஆந்திரப் பிரதேச போலீசார் சுட்டுக்கொன்றது தொடர்பாய், சுயேச்சையான முறையில் துரித விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு இன்று குரல் கொடுத்துள்ளது. இக்கொலைகள், சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டால், அவற்றிற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது குறித்து பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவு கூறுயிருப்பதாவது,
ஏப்ரல் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, ஆந்திரப் பிரதேச போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து, சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிற 20 பேரை சுட்டுக்கொன்று, எட்டு பேரை காயப்படுத்தியுள்ளனர்.
செம்மரக்கட்டைக்காக சட்ட விரோதமாய் மரங்களை வெட்டுபவர்களை போலீசார் கண்டுபிடித்ததாக பத்திரிக்கையாளர்களிடம் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். சரணடையுமாறு அந்நபர்களிடம் சொல்லப்பட்ட போது, அவர்கள் கற்களையும் கோடாரிகளையும் கொண்டு போலீசாரைத் தாக்கியதால், தற்காப்புக்காக அவர்களை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும், போலீஸ் அதிகாரி எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதுகிலேயே சுடப்பட்டுள்ளனர்.
"போலீசார் அளவுக்கதிகமான படைபலத்தை உபயோகித்தார்களா என்பதையும் இக்கொலைகள் யாவும் ‘போலி என்கவுன்ட்டர்களா' அல்லது சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனைகளா என்பதையும் தீர்மானிப்பதற்கு ஓர் குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும்" என பொதுமன்னிப்பு சபையின் இந்திய பிரிவின் விபி அபிர் கூறியுள்ளார். "போலீசார் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதுடன் அப்படிப்பட்டவர்கள் என்பதாக கருதப்படக் கூடாது."
"உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முற்றிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் தவிர, கொல்லுதற்குரிய செயல் மேற்கொள்ளப்படக் கூடாது."
இச்சம்பவம், "தனிநபர்களின் மனித உரிமைகளை கடுமையாய் மீறியுள்ளது" எனவும், "இவ்வாறு சுட்டுக் கொன்றது, 20 நபர்களின் உயிர்களைப் பறித்துள்ளதால், இதை தற்காப்புக்கானது என நியாயப்படுத்த முடியாது" எனவும் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள், போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் இச்செயல்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மூத்த அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் இது கேட்டுக் கொண்டுள்ளது.
சமீப வருடங்களில், செம்மரக்கட்டை கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட பலரும் போலீசாரால் ‘என்கவுன்ட்டர்' மூலம் கொல்லப்பட்டுள்ளனர். மே 2014-இல், சித்தூரில், கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்பட்ட மூவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் ஐந்து பேர் கடத்தல்காரர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களில், சந்தேகிக்கப்படுகிற கடத்தல்காரர்களால் அரசு அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
"பல நிகழ்வுகளில், கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாவரும், கிரிமினல் கும்பல்களால் ஏழை மரம் வெட்டுபவர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களாவர்" என்றார் விபி அபிர். "செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துவது என்பது மனித உரிமைகளை அலட்சியம் செய்வதற்கான விலக்கு எனுமாறு செயல்படுத்தப் படக்கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.