ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிபிஐ மனு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில்தான் கார்த்தி சிதம்பரம் சிக்கியுள்ளார். அந்த நிறுவனம் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது 2007ல் நடந்த முறைகேடு என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 14 நாட்கள் அவர் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த மார்ச் 23ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிபிஐ மனு. கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அப்பீல் செய்துள்ளது.