ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க செப். 28 வரை தடை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதிவரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்கு சிதம்பரம், டெல்லி ஹைகோர்ட்டை அணுகினார். மே 31ம் தேதி விசாரணை நடைபெற்றபோது, சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ம் தேதிவரை தடை விதித்தது டெல்லி ஹைகோர்ட். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டது. அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்றைய வாதத்தின் போது மூத்த வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், பிரமோத் குமார் துபே, ரமேஷ் குப்தா மற்றும் மோகித் மாதூர் ஆகியோர் சிதம்பரத்திற்காக ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி ஏ.கே.பதக், அமலாக்கத்துறை தனது பதிலை நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.