வீரப்ப மொய்லியின் உத்தரவால் 15 கிமீ நடந்தே அலுவலகம் சென்ற இந்தியன் ஆயில் சேர்மன்
கடந்த மாதம் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி வாரம் ஒருமுறை பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன் என அறிவித்தார் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி. அதன்படி கடந்த 9-ம் தேதி தனது இல்லத்தில் இருந்து காரில் அலுவலகம் செல்வதை தவிர்த்துப் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்துக்கு அவர் மெட்ரோ ரயிலில் சென்றார்.
அப்போது ரயில் நிலையத்தில் வைத்து, ‘எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அமைச்சகத்தின் கீழ் உள்ள 14 பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவர். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்' எனத் தெரிவித்தார்.
அதன்படி, அமைச்சரின் சுற்றறிக்கையை கண்ட இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் சேர்மனான ஆர்.எஸ்.புடோலா வாரத்திற்கு ஒருமுறை தனது வீட்டிலிருந்து 15 கி.மீட்டர் தூரம் உள்ள அலுவலகத்திற்கு நடந்தே செல்ல முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தவும் துவங்கிவிட்டார்.
இவரைப் போலவே, ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி., கெய்ல் போன்ற எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் வாரத்தில் ஒருமுறை நடந்தோ, ரெயில் அல்லது பஸ் மூலமாகவோ அலுவலகம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, கடந்த 9ம் தேதி மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் பயன்பாடு குறைந்தது எனத் தெரிய வந்துள்ளது.