ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. ஐஓசி அதிகாரி கைது: வழக்கை கையில் எடுத்த என்ஐஏ
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்தியன் ஆயில் கார்பரேஷன் அதிகாரியின் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முகமது சர்வாரின் மகன் முகமது சிராஜுத்தீன். அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பியதுடன் பலரை அந்த அமைப்பில் சேருமாறு கூறியுள்ளார். மேலும் பலரை தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவித்துள்ளார்.
இதையடுத்து 10.12.2015 அன்று அவர் ஜெய்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கின் தீவிரத்தை உணர்ந்து இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்பு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.