ஐபிஎல் 2018: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றிவாய்ப்பு?
மும்பை வாங்கடே மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள 11-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று தொடங்கிய 11-ஆவது ஐபிஎல் தொடரில் 'லீக்' ஆட்டங்கள் மே 20-ஆம் தேதியுடன் முடிந்தன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து 'பிளேஆஃப்' சுற்றுக்கு முன்னேறின.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?
- சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எப்படி?
- ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இறுதியாட்டத்துக்கு தகுதி பெற நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கடந்த 22-ஆம் தேதியன்று மோதின. இதில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
பின்னர், எலிமினேட்டர் பிரிவு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கடந்த 25-ஆம் தேதியன்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறைகளும் (2010, 2011), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 முறையும் (2016) கோப்பையை வென்றுள்ளன.
ஐபிஎல் 2018 இறுதியாட்டத்தில் மோதும் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி கூறுகையில் ''இரண்டு அணிகளும் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளன. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் மட்டுமல்ல திட்டமிடல் போன்ற அம்சத்திலும் இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன'' என்று குறிப்பிட்டார்.
''ஆனால், அனுபவம் மற்றும் அணியின் தொடர்ச்சியான கட்டுக்கோப்பான நிலை ஆகியவற்றில் சென்னை அணி சற்றே சிறப்பான நிலையில் உள்ளது. அதே வேளையில் ஹைதராபாத் அணியும் சற்றும் குறைந்தது அல்ல'' என்று விஜய் லோக்பாலி மேலும் தெரிவித்தார்.
3 ஐபிஎல் தொடர் இறுதியாட்டங்களில் சென்னை அணி தோற்றது குறித்து கேட்டபோது ''முந்தைய தொடர்களில் நடந்ததற்கும், இன்றைய போட்டிக்கும் தொடர்பில்லை. இரண்டு பந்துகளிலேயே ஒரு ஆட்டம் திசைமாறிவிடும்'' என்று அவர் கூறினார்.
ரஷித் கானை சென்னை அணி எப்படி எதிர்கொள்ளும்?
''தோனியை நன்கு அறிந்தவரையில் இளம் சுழல் பந்துவீச்சாளரும், ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஷித் கானை அவரே சிறப்பாக எதிர்கொள்வார். ரஷித் கானுக்கு எதிராக தனது ஆக்ரோஷ பேட்டிங் பாணியை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். உலகின் எந்த சிறப்பான பந்துவீச்சாளரையும் தனது அதிரடி பேட்டிங் பாணியில் வெல்லும் திறமை தோனிக்கு உண்டு'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.
''அதே வேளையில், ரெய்னா, ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு போன்ற சென்னை வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்ய வாய்ப்புண்டு'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.
கேன் வில்லியம்சன், யூசுப் பதான், ஷிகர் தவான் போன்ற ஹைதராபாத் அணியின் பேட்டிங் நட்சத்திரங்களை சென்னை அணி பந்துவீச்சாளர்கள் எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என்பதும் ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஷகிப், சித்தார்த் போன்ற ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.
சென்னை அணியின் பலம் என்ன?
இன்று நடக்கவுள்ள 2018 ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் வெற்றி வாய்ப்பு மற்றும் சாதக பாதகங்கள் குறித்து பிபிசி தமிழிடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் பேசினார்.
''இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், அந்த அணியின் அனுபவமும் இன்றைய போட்டியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும். அந்த வகையில் சென்னை அணிக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகம்'' என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 3 ஐபிஎல் தொடர் இறுதியாட்டங்களில் சென்னை அணி தோற்றது குறித்து சுட்டிக்காட்டியபோது, ''அது சென்னை அணிக்கு பாதகமாக அமையாது. சிஎஸ்கே அணியின் தலைவர் தோனியின் பக்குவமான அணுகுமுறை இறுதியாட்டத்தில் பரபரப்பான தருணங்களில் அந்த அணிக்கு கைகொடுக்கும்'' என்று ஸ்ரீராம் மேலும் கூறினார்.
இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கானை ராயுடு இதற்கு முன்பு நன்றாக எதிர்கொண்டார். அவரும் , சுரேஷ் ரெய்னாவும் ரஷித் கானை சிறப்பாக எதிர்கொண்டு பேட் செய்யும் பட்சத்தில் அது சிஎஸ்கே அணிக்கு லாபமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், இறுதியாட்டத்தில் பரபரப்பான தருணங்களை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று விளையாட்டு நிபுணர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
பிற செய்திகள்:
- பாம்பு கடித்த தாயும், அவரிடம் பால் குடித்த சேயும் மரணம்
- அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு
- மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன?
- தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்கள் எங்கே? மனித உரிமை ஆர்வலர் கேள்வி