ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்.. செப்டம்பரில் சான்ஸ்.. பிரிஜேஷ் பட்டேல் சொன்ன ஹேப்பி நியூஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கி நடைபெறுவது வழக்கம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால், நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த கிரிக்கெட் தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள்.
இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திப் போடப்பட்டது. இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஐபிஎல் தொடரை ஆரம்பிப்பதற்கு கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டி20 உலக கோப்பை 2020 தள்ளி வைச்சாச்சு... ஐபிஎல் கண்டிப்பா நடக்கும்... ஆனா தோனி கேரியர்
முழு அளவில் போட்டித் தொடர்
இதுதொடர்பாக ஒன்இந்தியாவின் 'MyKhel' இணையதளத்திடம் பேசிய, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறியதாவது: மிக விரைவில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூட உள்ளது. அடுத்த வாரத்திலேயே இந்த கூட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அப்போது முழு அளவிலான ஐபிஎல் போட்டி தொடரை, அதாவது 60 போட்டிகளையும் நடத்தும் வகையிலான திட்டம் வகுக்கப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம்
இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் இடையே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நம்மிடம் போதிய அளவுக்கு நாட்கள் இருப்பு உள்ளன. ஐபிஎல் தொடர் வெளிநாட்டு மண்ணில் வைத்து நடைபெற வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துவது பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு உரிய அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பயிற்சி தேவை
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில், வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துவிடுவார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் பயிற்சி தேவைப்படுகிறது. பிசிசிஐ தேதியை அறிவித்து விட்டால் அதற்கேற்ப ஐபிஎல் நிர்வாகம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் வர்ணனை
ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்வோர் வீட்டிலிருந்தே வர்ணனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது செலவை மிச்சப்படுத்தும் என்பதோடு, அவர்களின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். நேரடியாக கிரிக்கெட் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தொலைக்காட்சியில்தான் ரசிகர்கள் அவற்றை பார்க்க வேண்டி இருக்கும்.
ரசிகர்கள் ஆர்வம்
பல மாதங்களாக கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் அதிக ரசிகர்களை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்ற போதிலும், இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.