ஐபிஎல் சீசன்-7ல் நடந்த சூதாட்டத்தின் மதிப்பு ரூ.7ஆயிரம் கோடி..! துபாயிலிருந்து கொட்டுகிறது பணம்!!
மும்பை: கிரிக்கெட் இருக்கும்வரை பெட்டிங்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் புக்கிகளின் கைகளில் சிக்கி சீரழிந்த ஐபிஎல் சீசன் 7ல் மட்டும், ரூ.7 ஆயிரம் கோடி சூதாட்டப் பணம் புழங்கியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. ஐபிஎல்-8ல் இந்த தொகை 12 ஆயிரம் கோடியை எட்டும் என்பது அதிர்ச்சி. ஐபிஎல் போட்டிகளில் நிழலுக புள்ளிகள் ஆதிக்கம் இருப்பதே, இந்த அளவுக்கு பணம் புழங்கவும் காரணமாக உள்ளது.
முதல் ஐபிஎல் சீசனில் 3 ஆயிரம் கோடி
ஐபிஎல் முதல் சீசன் போதே, நிழலுலகமும் விழித்துக் கொண்டது. அந்த சீசனில் அவர்கள் செய்த முதலீடு ரூ.3 ஆயிரம் கோடிகள். ஆனால் கிடைத்த லாபம், ரூ.6 ஆயிரம் கோடிகள். ஒன்றுக்கு, இரண்டு மடங்கு. இப்படி ஒரு பிசினசை யாருக்குதான் விட்டுவிட தோன்றும். எனவேதான் 'முதலீட்டை' அதிகரிக்க தொடங்கினர்.
இரண்டு மடங்கு லாபம்
2வது ஐபிஎல் சீசனில் புக்கிகள் போட்ட முதலீடு 6ஆயிரம் கோடிகள், வசூலோ, 12 ஆயிரம் கோடிகள். 7வது சீசனின் போது 7 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்ட பணம் புழங்கியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள், கெடுபிடிகள் என எத்தனையோ இருந்தும்கூட, சூதாட்டம் நடந்தபடிதான் உள்ளது.
துபாயில் நிழலுலகம்
தாவூத் தலைமையிலான நிழலுலக குரூப்தான், துபாயை தலைமையிடமாக கொண்டு சூதாட்டத்திற்கான பணத்தை வாரி இறைக்கிறது. மொத்த சூதாட்ட மதிப்பில் 40 சதவீதம் தாவூத் குரூப்புடையதாம். எஞ்சிய 60 விழுக்காட்டு பணம் மறைமுகாக இந்த குரூப்போடு சம்மந்தப்பட்டுள்ளோரிடமிருந்தும், பிற தனியார்களிடமிருந்தும் செல்கிறது. ஐபிஎல் மட்டுமின்றி, வங்கதேச கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் சூதாட்டம் தலைகாட்டிவருகிறதாம்.
வருடம் முழுவதும் வரும் பணம்
சூதாட்டப் பணம் மொத்தமாக இந்தியாவிற்குள் வருவதில்லை. இது ஆண்டு முழுவதும் தொடரும் நடைமுறையாக உள்ளது. ஹவாலா முறையில் துபாயில் இருந்து பணம் இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுப்பப்பட்டுவருகிறது. டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களும்தான் இந்த பணத்தை பெறும் மையங்களாக செயல்படுகின்றன. இங்கிருந்தே அந்த பணம் சூதாட்டக்காரர்களுக்கு சப்ளையாகிறது. ஹவாலா நபர்களுக்கும், புக்கிகளுக்கும், உரிய கமிஷன் தரப்படுகிறது.
புக் ஆவது இப்படித்தான்..
பாலிவுட்டிலுள்ள சிறு நடிகர்கள் மூலமாகவும் விளையாட்டு வீரர்களை புக்கிகள் அணுகுகிறார்கள். எல்லா வீரர்களையும் அணுகி மாட்டிக்கொள்வது புக்கிகள் வழக்கம் கிடையாது. எந்த வீரர் எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை கொண்டுள்ளார் என்பதை உன்னிப்பாக கவனித்த பிறகே, அந்த வீரரை அணுகி, புக்கிகள் பேரம்பேசி, தாங்கள் கூறும்படி விளையாடச் செய்கின்றனர். இந்த தகவல்களை உளவுத்துறையின் நிதித்துறை பிரிவு உயர் அதிகாரி ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.