ஐபிஎல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு உச்சநீதிமன்ற குழு நோட்டீஸ்!
டெல்லி: ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணையில், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழு, சென்னை சூப்பர் கிங்ஸ்சின், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில், 2013ம் ஆண்டு சீசனின்போது, சூதாட்டம் எட்டிப்பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ளது. அதில் சிஎஸ்கே அதிகாரியாக இருந்த, குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தண்டனை குறித்து முடிவெடுக்கவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழு குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் ஆகியோர் மார்ச் 11ம்தேதிக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குந்த்ரா, மார்ச் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி என்ற முன்முடிவின் பேரில் உரிமையாளர் ஒப்பந்தம் பிரிவு 11.3-இன் கீழ் மீறப்பட்டுள்ளது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிகார் கிரிக்கெட் சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.