ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரி: உதவிய மனைவி, ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகி கைது
ஐஏஎஸ் தேர்வில் முறைகேடு செய்த ஐபிஎஸ் அதிகாரி கைதான நிலையில், அவரது மனைவி, ஐஏஎஸ் அகாடெமி நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ப்ளூடூத் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் முறைகேடு செய்ய கணவருக்கு உதவியதாக ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி மற்றும் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகியையும் ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்தனர். இருவரையும் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் 985 பதவிகளை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி(புதூர் பள்ளி), அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது.
சபீர் கரீம் ஐபிஎஸ்
கடந்த திங்கட்கிழமையன்று காலை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி சப் டிவிஷன் ஏ.எஸ்.பியாக உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த சபீர் கரீம் தேர்வு எழுதினார்.
மனைவியிடம் பதில் கேட்ட அதிகாரி
இவர் தேர்வு மையத்தில் இருந்து தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை சட்டை பட்டனில் உள்ள கேமரா மூலம் படம் பிடித்து அதை மெயிலில் அனுப்பி வைத்து விடுவார். ஹைதராபாத்தில் உள்ள மனைவி ஜோசி சபீர் கேள்விக்கான பதிலை ப்ளூடூத் மூலம் கூறிவிடுவார். இதை மோப்பம் பிடித்த மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சபீர் கரீமை கையும் களவுமாக பிடித்தனர்.
14 நாட்கள் சிறை தண்டனை
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சபீர் கரீமை நேற்று முன்தினம் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற 14வது மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
மனைவியை மடக்கிய போலீஸ்
இதேபோன்று கேள்விக்கு சபீர் கரீம் மனைவியையும் ஹைதராபாத் போலீசார் உதவியுடன் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர். இந்த மோசடிக்கு உதவியதாக ஜோசி சபீர் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகி ராம்பாபு,30 என்பவரையும் பிடித்தனர்.
ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாகி கைது
இவர்கள் மூன்று பேர் மீது எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜோசி சபீர் மற்றும் அவரது நண்பரும் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாகியுமான ராம்பாபுவையும் கைது செய்து அழைத்து வர திங்கட்கிழமை மாலையே தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படையினர் விமானம் மூலம் சென்றனர்.
ஹைதராபாத்தில் கோர்ட்டில் ஆஜர்
ஹைதராபாத் போலீசாரிடம் இருந்து ஜோசி சபீர் மற்றும் ராம்பாபுவையும் தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.