சிறையில் 'சிஸ்டம்' சரியில்லை.. அம்பலப்படுத்திய 'தில்' ரூபா வாழ்க்கை சினிமாவாகிறது!
பெங்களூரு பரப்பன அக்ரஹைரா சிறையில் சசிகலாவின் விதிமீறல்களை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி டிஐஜி ரூபாவின் வாழ்க்கையை படமாக்க இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு : திரைப்பட இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வாழ்க்கைக் கதையை படமாக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் சிஸ்டம் சரியில்லை என்றும் விதிகளை மீறி பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் பகிரங்கமாக கூறினார் டிஐஜி ரூபா. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விவிஐபி அந்தஸ்து தருவதாக குற்றம்சாட்டினார் ரூபா.
அதுமட்டுமல்ல கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமையின் கீழ் செயல்படும் சிறைத்துறையில் சிஸ்டம் சரியில்லை என்றும் போட்டு உடைத்தார். சசிகலா மட்டுமின்றி சிறையில் சர்வ சாதாரணமாக நடமாடும் போதைப் பொருள், கைதிகள் சிலருக்கு சொகுசு வசதிகள் உள்ளிட்டவற்றையும் தைரியமாகச் சொன்னார் ரூபா.
பாராட்டை பெற்ற ரூபா
இதனையடுத்து ரூபா போக்குவரத்து காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பெண் ஐபிஎஸ அதிகாரியான ரூபா குற்றத்தை தயங்காமல் சுட்டிக்காட்டியதால் அனைவரின் அபிமானத்தையும் பெற்றார். மேலும் நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பலரும் பாராட்டத் தொடங்கினர்.
படமாக்க திட்டம்
இந்நிலையில் கன்னட திரைப்பட இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் காவல்துறை அதிகாரி ரூபாவின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது குறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் அனுமதி பெற்று அதன்பின்னர், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கன்னட திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
சிறை விதிமீறல்கள்
திரைப்பட படப்பிடிப்பிற்காக ஜெயிலை சுற்றிப்பார்க்க சென்ற போது தான் இது போன்ற பல விதிமீறல்களை பார்த்துள்ளதாக இயக்குனர் ரமேஷ் கூறியுள்ளார். எனவே தைரியமாக இந்த விஷயத்தை அம்பலப்படுத்திய ரூபாவின் வாழ்க்கை படமாக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
முதல் சிறைத்துறை டிஐஜி
2000ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ரூபா, தென் மாநிலங்களிலேயே முதன்முதலாக சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாவின் வாழ்க்கையை கதையாக்குவது சரியான விஷயம் தான், ஆனால் சசிகலாவை காட்டினால் தமிழகத்தின் மானம் கப்பலேறிவிடுமே.