சசிகலாவோடு இளவரசியும் சிறைக்குள் சலுகை அனுபவித்தார்.. ரூபா மீண்டும் குற்றச்சாட்டு
பெங்களூர்: சசிகலாவுடன் சிறையிலுள்ள இளவரசியும் விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்தார் என்று ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா. அவரது அண்ணி இளவரசியும் அதே சிறையில் அருகாமையிலேயே இருக்கிறார்.
இந்த நிலையில் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சிறைக்குள் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாகவும், இதற்காக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறினார்.
பணிமாற்றம்
இதையடுத்து இவ்விரு அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரூபா போக்குவரத்து துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
அவதூறு வழக்கு
இந்த புகாருக்கு 3 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்று சத்யநாராயணராவ், ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைதான்
இதுகுறித்து தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில், ரூபா கூறுகையில், சசிகலா மட்டுமில்லை, இளவரசியும் கூட சிறப்பு சலுகைகளை அனுபவித்தார். இது உண்மைதான். சத்யநாராயணராவ் வக்கீல்கூட, எனது புகாரை உண்மை என்றுதான் கூறியுள்ளார். அப்படியும் எனக்கு எதற்கு வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது என்பது புரியவில்லை.
சந்திக்க தயார்
அவதூறு வழக்கு தொடரப்பட்டாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு ரூபா தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.